ஒரு பிண்டத்தின் அலறலடக்கல்

யாருமற்ற அநாதை வினாடிகளில்
உதறப்பட்ட அங்கத்தால்
சிதறப்பட்ட பொருள்கள்
ஒரு குப்பைக்கூளமாய் கிடந்தது.

யோனியிலிருந்து குருதி வடிந்து
தொடைக்குக் கீழ் படிந்து
காய்ந்து போய்க்கிடந்தது.
ரணத்தையும் ரத்தத்தையும்
தாங்காமல் இழுத்து, போயிருக்கிறாள்.
பிதுக்கிய பிண்டத்தை
விட்டெறிந்திருக்கிறாள்.

குருதி படிந்தவாறு கிடந்த
உயிருள்ள ஒரு பிண்டம்
ஊளையிட்டது.
காற்றை வெறுத்துப் போய்
அலறியிருப்பது அறிகிறேன்.

வெடத்துப்போன உள்ளத்தால்
கிடத்திய சடலத்தை
வெளிவந்த கரு முன்னே
எரிக்க முற்படுகிறேன்.
முன்னதாக
அந்த பிண்டம் மீண்டும் அழுதது.

இம்முறை
காற்றுக்காக அல்ல
வயிற்றுக்காக.

என் செய்ய?

என் மடி கிடத்தி
முலை எடுத்து
தின்னச் செய்கிறேன்.
மென்காற்றின் ஓசை
என் செவிக்குள் அலையாக...

யாரும் பார்த்துவிடக்கூடும்
வெகுவாக பசியடக்கு என்று
நடுக்கத்தோடு சுற்றியது சிரம்.
மெல்ல அருகினில் வந்து
தன் கையை எடுத்து
கும்பிட்டது ஒரு கரம்.

நித்திரை ஆழ்ந்த
பிண்டத்தின் தலைமுகர்ந்து
கண்களில் நீர்கோத்தேன்.
வணங்கிய கரங்களின்மேல்
துளிகள் விழுந்தன...

Comments