நன்றி காதலனே!

நானும் டிடோவும் (Dido)

சுடப்பட்ட சில வரிகளுடன் என் சொந்த கவிதை இது. கருவில் அவளுடைய தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் முழுமையாக என்னால் சொந்தம் கொண்டாட முடியாது....

தேநீரின் ஆறிய நிலையும்
படுக்கைகளில் கசங்கிய
பூக்களையும் தளர்வோடு
பார்த்துவிட்டு மெல்ல எழுகிறேன்.
கதிரவனின் கீற்றுகள்
என் ஜன்னலில் அமர
மறுத்து நிற்கிறது.
மழைக்கான அறிகுறியாய் மேகங்கள்
தொய்வான நிலையில் இருக்கின்றன.
என் கண்களுக்கு நேரே
மாட்டப்பட்டிருந்த
உன் புகைப்படம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!".


குளியலறையில் தண்ணீர்
வர மறுக்கிறது
நீ தொட்ட விரலில்
ரேகைகள் செல்ல மறுக்கிறது.
ஒட்டாத உடைகளுடன்
அலுவலகம் செல்லுகிறேன்.
என் கைப் பேசியில் பொதியப்பட்ட
உன் அழகு முகம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"


சொத்துப் பிரச்சனையில்
வீட்டை இடிக்கக் காத்திருக்கின்றன
கேட்டர் பிள்ளர்கள்.
கடைசியாக இறுக்கி தாளிட
கைகள் கதவுகளைத் தேடுகிறது.
ஒரு பூங்கொத்தில் ஒளிந்திருந்த
உன் விழிகள் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"


வாழ்க்கை வசதிகளும்
இயற்கை நியதிகளும்
என்னை விட்டு நீங்குகின்றன.
என்னை விட்டு நீங்கிய உன்
நாவில் விழைந்த அந்த வார்த்தைகள்
தனித்துவிடப்பட்ட எனக்கு தைரியங்கள்.


நன்றி காதலனே!

Comments